twitter
rss

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…..

pongal.jpg
தைக்கின்ற முள்சொற்கள்
தமைப்பேசாத் தமிழினத்தார்
‘தை’க்கு அன்று அப்பெயரைத்
தந்ததென்ன காரணமோ?
வித்தை விதைப்பவர்க்கு
விளைச்சலையும் அனுபவிக்கும்
வித்தை தெரியவில்லை;
வியர்வையினால் பிறருக்குச்
சொத்தைப் பெருக்கித்தாம்
சொத்தையாய்ப் போவோர்க்கும்
இத்தைதான் கிழிந்திருக்கும்
இதயத்தைக் கொஞ்சம்
தைத்துத் தருவதனால்
தையென்று சொன்னாரோ?
காளைகளின் கொம்புகளைக்
காதலியர் கொங்கைகளாய்க்
காளையர்கள் எண்ணிக்
கைகளால் தழுவுகையில்
தைக்கின்ற புண்ணே
தாம் விரும்பும் குங்குமமாய்
வைக்கின்ற பெண்கள்தாம்
வைத்தாரோ இப்பெயரை
அத்தை மகளும், அவள்
அம்மான் மகனும், இனி
இத்தையில் மணம்புரிய
இனிய வழி பிறக்குமென்று
மெத்தைக் கனவுகள்
மெல்ல நெஞ்சைத் தைப்பதனால்
தத்தைத் தமிழிலிதைத்
தையென்று சொன்னாரோ?
மையலார் கண்ணால்
மணவாளன் இதயத்தைத்
தையலார் தைப்பதனால்
தையென்று சொன்னாரோ?
தையலர்க்கும் ஆடவர்க்கும்
தக்கபடி புத்தாடை
தையலர்கள் தைப்பதனால்
தையென்று சொன்னாரோ?
கைதனில் கரும்பெடுத்துக்
களிக்கின்ற சிறுவர்கள்
தைதையென ஆடுவதால்
தையென்று சொன்னாரோ?
சாதிப் பகையால்
சமயப் பிணக்குகளால்
வீதிக் கலவரத்தால்
வெறிபிடித்த கட்சிகளின்
மோதல்களால் தங்கள்
முகவரியை −ழந்துவரும்
ஆதித் தமிழர்
அனைவரையும் ஒன்றிணைத்து
அன்பாலே தைக்கின்ற
அந்நாளே தையென்போம்
இன்பநாள் காண்போம்
இணைந்து என
இனிய தைத்திருநாளில் வாழ்த்துவது
இலுப்பையூர் அரவிந்தன் .

0 comments:

Post a Comment